Wednesday, December 26, 2012

டிசம்பர் 26, 2012

நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபட விரும்புவோருக்கு
புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   புனித ஸ்தேவான் திருவிழாவான இன்று வத்திக் கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாறு மூவேளை செப உரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விற்கு அடுத்த நாள், திருச்சபையின் முதல் மறை சாட்சியாம் புனித ஸ்தேவான் திருவிழாவைச் சிறப் பிக்கின்றோம். புனித ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராகவும், தூய ஆவியின் வல்லமையை நிறைவாய் பெற்றவராகவும் இருந்தாரென திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துரைக்கின்றது. அபாயகரமான சூழல்களிலும், பாதுகாப்பற்ற நிலை களிலும் அச்சமின்றி இயேசுவுக்கு சான்று பகர விசுவாசிகள் அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், "அஞ்சவேண்டாம், அந்நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது உங்களுக்கு அருளப்படும். பேசுவது நீங்களல்ல, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" என்ற இயேசுவின் வாக்குறுதி இப்புனிதரில் நிறைவேறியது.
   தூய ஆவியின் வல்லமையின் துணைகொண்டு செயலாற்றி, பேசி, மரித்த திருத் தொண்டர் ஸ்தேவான், இறுதி நிமிடம் வரை இயேசுவுக்குச் சான்று பகர்பவராக இருந்தார். அவர், தன் மரணத்திலும் இயேசுவின் மாதிரியை பின்பற்றினார். இயேசு சிலுவையில் தொங்கியபோது செபித்ததுபோல் இவரும் தன் ஆவியை இயேசுவின் கைகளில் ஒப்படைப்பதாகக் கூறி உயிர் விட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத் துன்பு றுத்தியவர்கள் சார்பில் இறைவனிடம் மன்றாடினார். அவர் சாகும் வேளையில் வானத்தை உற்று நோக்கியபோது, வானம் திறந்திருப்பதையும் மானிட மகன் கடவு ளது வலப்பக்கத்தில் நிற்பதையும் கண்டார்.
   கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மகிழ்வில் இருக்கும் நாம், புனித ஸ்தேவானைப்போல் இறைமகனில் நம் பார்வையைத் திருப்பி, இறைவன் மனுவுருவான மறையுண்மை குறித்து ஆழ்ந்து தியானிப்போம். திருச்சபை வழங்கும் அருளடையாளங்கள் வழி ஊக்கம்பெற்று, இயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய இணைப்பைக் கொண்டுள்ள நம் மில் தன் மீட்புபணிகளைத் தொடர அவர் ஆவல் கொள்கிறார். புனித ஸ்தேவானைப் போல் நாமும் ஒளிக்கென நம் வாழ்வைத் திறந்து, நன்மையின் பாதையில் நடந்து, இறையன்பின் திட்டத்திற்கு இயைந்த மனித குலத்தைப் படைக்க உதவுவோம்.
   இறுதியாக, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார். எடுத்துரைக்கும் முறைகளும் தொழில்நுட்பங்களும் இப்பணியில் ஓரளவு உதவினாலும், தூய ஆவியின் வழிநடத் துதலின் இன்றியமையாமைக் குறித்தும் இப்புனிதர் நமக்குக் காட்டுகின்றார். இப்புதிய நற்செய்தி அறிவித்தல், இயேசுவை உயிரூட்டமுள்ள முறையில் மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வதைக் குறிக்கின்றது. இந்த நம்பிக்கையின் ஆண்டில் இயேசுவுக்குத் துணிவுடன் சான்று பகரும் மக்கள் அதிகரிக்க உதவுமாறு அன்னை மரியாவின் பரிந் துரையை வேண்டுவோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.