Sunday, February 24, 2013

பிப்ரவரி 24, 2013

சரியான பாதைக்கும், செயலுக்கும் திரும்ப
செபம் நம்மை வழிநடத்துகிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான மேற்பட்ட மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகலில் இறுதி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் உருமாற்றம் பற்றி எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாடு நமக்கு எப்பொழுதுமே ஆண்டவரின் உருமாற்ற நற்செய்தியை வழங்குகிறது. நற்செய்தியாளர் லூக்கா, 'இயேசு வேண்டிக் கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது' என்று அழுத்தமாக கூறுகிறார். பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் உயர்ந்த மலைமீது இயேசு ஆன்மீக பயிற்சியில் இருந்தபோது, தந்தையுடனான உறவில் அவர் பெற்ற ஆழ்ந்த அனுபவம் இது; இந்த மூன்று சீடர்களும் தங்கள் குருவின் இறைத்தன்மை வெளிப்பட்ட தருணங்களில் எப்பொழுதும் உடனிருந்தவர்கள்.
   சற்று முன் தனது இறப்பையும், உயிர்ப்பையும் (9:22) முன்னுரைத்த ஆண்டவர் தன் மாட்சியின் முன்சுவையை சீடர்களுக்கு அளிக்கிறார். திருமுழுக்கைப் போலவே, உருமாற்றத்தின் போதும், நாம் விண்ணக தந்தையின் குரலை கேட்கிறோம்: "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்" (9:35). மோசே மற்றும் எலியாவின் உடனிருப்பு, பழைய உடன்படிக்கையின் சட்டத்தையும் இறைவாக்கினரையும் குறித்து நிற்கிறது; இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: உடன்படிக்கையின் முழு வரலாறும் அவரையே சுட்டிக்காட்டுகின்றன, மோசேயின் காலத்தைப் போன்ற வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அல்லாமல், கிறிஸ்து விண்ணகத்துக்கு ஒரு புதிய விடுதலைப் பயணத்தை நிறைவு செய்கிறார் (9:31). "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" (9:33) என்ற பேதுருவின் வார்த்தைகள், இந்த மறைபொருள் அனுபவத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக காணப்படுகின்றன. புனித அகுஸ்தீன் கோருகிறார்: "[பேதுரு] ... மலை மீது ... கிறிஸ்துவை ஆன்ம உணவாக கொண்டார். அவர் ஏன் வேலைகளுக்கும் துன்பங்களுக்கும் திரும்பி வர வேண்டும், மேலே இருக்கும்போது அவர் கடவுளுக்குரிய தூய அன்பை முழுமையாக உணர்ந்தது அவரை புனித நடத்தையில் வாழ தூண்டியது?"
   நற்செய்தியின் இந்த பகுதியை தியானிப்பதன் வழியாக நாம் மிக முக்கிய பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். முதலாவது, செபத்தின் முதன்மை, அது இல்லாமல் திருத்தூது மற்றும் பிறரன்பு பணிகள் அனைத்தும் நடவடிக்கையாக சுருங்கிவிடும். தவக்காலத்தில் நாம் செபத்திற்கு போதிய நேரம் ஒதுக்க கற்றுக்கொள்கிறோம், தனிப்பட்ட விதத்திலும் சமூகத்திலும் அது நமது ஆன்மீக வாழ்வுக்கு உயிர்மூச்சு அளிக்கிறது. மேலும், செபிப்பது என்பது உலகம் மற்றும் அதன் முரண்பாடுகளில் இருந்து ஒருவரை தனிமைப்படுத்துவது இல்லை, மாறாக தாபோரில் பேதுரு விரும்பியது போன்று, செபம் சரியான பாதைக்கும், செயலுக்கும் திரும்ப நம்மை வழிநடத்துகிறது. நான் தவக்காலத்துக்கான எனது செய்தியில் எழுதியிருப்பது: "கிறிஸ்தவ வாழ்வு, கடவுளை சந்திப்பதற்காக தொடர்ந்து மலை ஏறுவதையும், பின்னர் அவரிடம் இருந்து பெற்ற அன்பையும் பலத்தையும் தாங்கி கீழே இறங்கி வருவதையும் உள்ளடக்கியது, அதன் மூலம் கடவுளின் சொந்த அன்பைக் கொண்டு நமது சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்ய முடியும்.
   அன்பு சகோதர சகோதரிகளே, எனது வாழ்வின் இத்தருணத்தில், இந்த கடவுளின் வார்த்தை தனிப்பட்ட விதத்தில் எனக்கு வழங்கப்பட்டதாக உணர்கிறேன். செபத்திலும் தியானத்திலும் மேலும் அதிகமாக என்னை அர்ப்பணிக்குமாறு, "மலை மீது ஏற" ஆண்டவர் என்னை அழைக்கிறார். ஆனால் இது திருச்சபையை கைவிடுவதாக பொருளாகாது, உண்மையில், இதை செய்ய கடவுள் என்னை கேட்டாரென்றால், அதன் மூலம், இதுவரை நான் செய்தது போன்று, அதே அர்ப்பணத்தோடும் அதே அன்போடும், எனது வயதிற்கும் பலத்திற்கும் பொருந்தும் வகையில் திருச்சபைக்கு எனது சேவையைத் தொடர முடியும். நாம் கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்: செபத்திலும் பிறரன்பு செயல்களிலும் ஆண்டவர் இயேசுவை நாம் அனைவரும் பின்பற்ற அவர் எப்பொழுதும் நமக்கு உதவி செய்வாராக!
   இந்த நாட்களில் நான் பெற்று வரும் நன்றிக்கும், பாசத்துக்கும், செப நெருக்கத்துக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈஸ்டரை நோக்கிய தவக்கால பயணத்தை நாம் தொடரும் வேளையில், உருமாற்றத்தின் வழியாக மலை மீது மாட்சியை வெளிப்படுத்திய மீட்பராம் இயேசு மீது நமது கண்களை தொடர்ந்து பதிப்போம். உங்கள் அனைவர் மீதும் கடவுளின் ஆசிகள் அதிக அளவில் பொழியப்பட வேண்டுகிறேன்.