Wednesday, October 24, 2012

அக்டோபர் 24, 2012

மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தை
கடவுள் நமக்கு வெளிப்படுத்துகிறார் - திருத்தந்தை

   நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் தனது வழக்கமான புதன் பொதுமறைபோதகங்களில் இந்த நம்பிக்கை ஆண்டு சிந்தனைகளை வழங்கவிருப்பதாகக் கடந்த புதன் பொது மறைபோதகத்தில் அறிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று நம்பிக்கை குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
   நம்பிக்கை ஆண்டின் நமது மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக நம்பிக்கையின் இயல்பு குறித்து இன்று பார்ப்போம். நம்பிக்கை என்பது, கடவுள் பற்றிய அறிவை மட்டும் வெறுமனே கொண்டிருப்பதற்கும் மேலாக, அவரை வாழ்வில் சந்திப்பதாகும். கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றில் தம்மையே வெளிப்படுத்திய கடவுளை நம்பிக்கை வழியாக அறிந்து அன்புகூர்கிறோம். அவ்வாறு செய்யும்போது, மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தையும் உண்மையையும் அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த நம் காலங்களின் ஆன்மீகக் குழப்பங்களுக்கு மத்தியில் உறுதியான பற்றுறுதியையும் வழியையும் நம்பிக்கை நமக்கு அளிக்கின்றது. அனைத்துக்கும் மேலாக, நம்பிக்கை ஒரு விண்ணகக் கொடை. இறைவார்த்தைக்கு நமது இதயங்களையும் மனங்களையும் திறக்கவும், திருமுழுக்கு வழியாக திருச்சபைக்குள் அவரது இறைவாழ்வில் பங்குதாரர்கள் ஆகவும் நம்பிக்கை நமக்கு உதவுகிறது. எனினும், நம்பிக்கை, நமது அறிவையும் சுதந்திரத்தையும் சார்ந்து இருக்கும் ஓர் ஆழமான மனிதச் செயலாகவும் இருக்கின்றது. கடவுளது அழைப்பையும் அவரது கொடையையும் நாம் வரவேற்கும்போது நமது வாழ்வும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாற்றம் அடைகின்றன. நமது நம்பிக்கையை நாம் முழுமையாக வாழவும், நம்பிக்கை உறுதியளிக்கும் நித்திய வாழ்வுக்கு மற்றவர்கள், தங்களின் இதயங்களைத் திறந்து வைத்து, இறைவார்த்தையைக் கேட்டு அதனை ஏற்கவும் இந்த நம்பிக்கை ஆண்டு உதவுவதாக!
   வருகிற நவம்பர் 24ம் தேதி இடம்பெறும் நிகழ்வில் பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வே, லெபனனின் மாரனைட் ரீதியின் அந்தியோக்கிய முதுபெரும் தலைவர் பெச்சரா பெட்ரோஸ் ராய், சீரோ-மலங்கரா ரீதி பேராயர் பசெலயொஸ் கிளீமிஸ் தொட்டுங்கல், நைஜீரியாவின் அபுஜா பேராயர் ஜான் ஒலோருன்பெமி ஒனையேகன், கொலம்பியாவின் பொகோட்டா பேராயர் ரூபன் சலாசர் கோமெஸ், பிலிப்பைன்சின் மனிலா பேராயர் லூயிஸ் அன்டோனியோ தாக்லே ஆகிய ஆறு பேர் கர்தினால்கள் அவையில் புதிதாக இணையவிருக்கிறார்கள். புனித பேதுருவின் வழிவருபவர் தமது சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் திருப்பணியில் அவருக்கு உதவ வேண்டியவர்கள் கர்தினால்கள். இவர்களுக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
   இவ்வாறு தனது புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, 16ம் பெனடிக்ட், ஜப்பான், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, கானடா, பிரிட்டன், டென்மார்க், நார்வே, நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து வந்திருந்த பயணிகளை வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, இந்த ஆறு பேருடன் சேர்ந்து 122 ஆக உயர்ந்துள்ளது.