Sunday, March 24, 2013

மார்ச் 24, 2013

சிலுவையில் இறப்பதற்காகவே இயேசு
எருசலேமில் நுழைந்தார் - திருத்தந்தை

   வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் நிகழ்த்திய குருத்து ஞாயிறு திருப்பலியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய மறையுரை பின்வருமாறு:
   இயேசு எருசலேமில் நுழைகிறார். விழாக்கால மனநிலையோடு சீடர்களின் கூட்டம் அவரோடு செல்கிறது. அவர்களது உடைகள் அவருக்கு முன் விரிக்கப்படுகின்றன, அவர் செய்த புதுமைகள் பற்றி பேசப்படுகிறது, சத்தமான வாழ்த்தொலிகள் கேட்கிறது: "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" (லூக்கா 19:38).
   மக்கள், கொண்டாட்டம், வாழ்த்து, ஆசி, அமைதி: எங்கும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. எளியோர், தாழ்ச்சியுடையோர், ஏழைகள், மறக்கப்பட்டோர், உலகத்தின் கண்களில் பெரிதாக தெரியாதோரின் உள்ளங்களில் பெரிய நம்பிக்கையை இயேசு தட்டி எழுப்புகிறார். அவர் மனித துன்பங்களை புரிந்துகொள்கிறார், கடவுளின் இரக்கமுள்ள முகத்தை காண்பிக்கிறார், உடலையும் ஆன்மாவையும் குணமாக்க அவர் வளைந்து கொடுக்கிறார். இந்த இதயமே நம் அனைவரையும் நோக்குகிறது, நமது நோய்களையும், பாவங்களையும் பார்க்கிறது. இயேசுவின் அன்பு பெரியது. இத்தகைய அன்புடன் எருசலேமில் நுழையும் அவர் நம் அனைவரையும் காண்கிறார். இது அழகான காட்சி, இயேசுவின் அன்பின் ஒளி, அவர் இதயத்தின் ஒளி, மகிழ்ச்சி, கொண்டாட்டம்.
  திருப்பலியின் தொடக்கத்தில், இவை அனைத்தையும் மீண்டும் செய்தோம். நமது குருத்தோலைகளையும், ஒலிவ கிளைகளையும் நாம் அசைத்தோம், "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!" என்று பாடினோம்; நாமும் இயேசுவை வரவேற்றோம்; அவருடன் இணைந்திருக்கும் நமது மகிழ்ச்சியை நாமும் வெளிப்படுத்தினோம், அவரை நமது நெருக்கத்தில் அறிந்து, நம்மிலும், நம் நடுவிலும் ஒரு நண்பராக, சகோதரராக மட்டுமின்றி அரசராகவும் இருக்கிறார்: அதுவே, நமது வாழ்வுக்கு ஒளி தரும் கலங்கரை விளக்கம். இயேசு கடவுளாக இருக்கிறார், ஆனால் அவர் தன்னை தாழ்த்தி நம்மோடு நடக்கிறார். அவர் நமது நண்பராகவும், நமது சகோதரராகவும் இருக்கிறார். இங்கு, அவர் நமது பயணத்தில் நமக்கு ஒளியேற்றுகிறார். எனவ, இன்று நாம் அவரை வரவேற்கிறோம். இங்கு நம் மனதில் முதலாவதாக தோன்றும் வார்த்தை "மகிழ்ச்சி!" சோகமுள்ள ஆண்களாகவோ, பெண்களாகவோ இருக்காதீர்கள்: ஒரு கிறிஸ்தவர் ஒருபோதும் சோகமாக இருக்க கூடாது. அவநம்பிக்கைக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்கள்!
   நமது மகிழ்ச்சி அதிகமான பொருட்களை கொண்டிருப்பதால் வருவதில்லை. மாறாக, ஒரு மனிதரை சந்திப்பதால் வருகிறது: இயேசு, அவரோடு இருப்பதை அறிந்து கொண்டால் ஒருபோதும், கடினமான தருணங்களிலும், நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளிலும், தீர்க்க முடியாததாக தோன்றும் இடையூறுகளிலும் நாம் தனித்து இருப்பதில்லை. இத்தகைய நேரத்தில் எதிரியோ, அலகையோ வந்து, அதுவும் வானதூதரின் வேடத்தில் மெல்ல வந்து தனது வார்த்தையை நமக்கு கூறலாம். அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம்! நாம் இயேசுவை பின்பற்றுகிறோம். நாம் இணைந்திருக்கிறோம், நாம் இயேசுவை பின்பற்றுகிறோம், அனைத்துக்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார், தனது தோள்களில் நம்மை சுமக்கிறார். இதுவே நம் மகிழ்ச்சி, இந்த நம்பிக்கையையே நாம் இந்த உலகத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். விசுவாசத்தின் மகிழ்ச்சியை நாம் ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்வோம். நமது விசுவாசம் திருடப்படாதபடி பார்த்துக்கொள்வோம். இயேசு நமக்கு தந்த நம்பிக்கையில் உறுதியாய் இருப்போம்!
   இரண்டாவது வார்த்தை: இயேசு ஏன் எருசலேமில் நுழைந்தார்? மேலாக: இயேசு எவ்வாறு எருசலேமில் நுழைந்தார்? மக்கள் கூட்டம் அவரை அரசராக அறிக்கையிட்டது. அவர் அதை மறுக்கவில்லை, அவர் அவர்களை அமைதியாக இருக்குமாறு கூறவில்லை. ஆனால் இயேசு எத்தகைய அரசர்? நாம் அவரை உற்று நோக்குவோம்: அவர் ஒரு கழுதையின் மீது பயணம் செய்கிறார், அவருக்கென்று ஓர்  அரசவை இல்லை, அவரது வலிமையின் அடையாளமாக எந்த படையும் அவரை சூழ்ந்து வரவில்லை. அவர் தாழ்ச்சியும், எளிமையும் உள்ள நாட்டுப்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார், அவர்கள் "இயேசுவே மீட்பர்" என்று விசுவாசம் கொண்டிருந்தார்கள். இயேசு புனித நகரத்தில் நுழைந்தது உலக அரசர்களுக்குரிய மரியாதையை பெறுவதற்கு அன்று. எசாயா முன்னரிவித்தவாறு, சாட்டையால் அடிக்கப்படவும், நிந்தனை செய்யப்படவும் அவர் நுழைந்தார். முள்முடியை பெறவும், கொலையும், ஊதா அங்கியை பெறவும் அவர் நுழைந்தார்: அவரது அரசக்கோலம் அவமானத்துக்குரியதாய் இருந்தது. மரத்தினாலான பழுவை சுமந்துகொண்டு கல்வாரியில் ஏறுவதற்காக அவர் நுழைந்தார். இது நமக்கு இரண்டாவது வார்த்தையை கொண்டு வருகிறது: "சிலுவை!" சிலுவையில் இறப்பதற்காகவே எருசலேமில் நுழைந்தார். இங்கு கடவுளுக்குரிய அவரது அரசத்தன்மை ஒளிர்கிறது: சிலுவை மரமே அவரது அரச அரியணையாக இருக்கிறது.
   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கர்தினால்களிடம் கூறியதை நான் நினைத்து பார்க்கிறேன்: "நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட அரசரின் இளவரசர்களாய் இருக்கிறீர்கள்" அதுவே கிறிஸ்துவின் அரியணை. இயேசு அதை தன் மீது சுமது செல்கிறார்... ஏன்? ஏன் சிலுவையை? இயேசு தீமையை, வேண்டாததை, உலகின் பாவங்களை, நமது பாவங்களையும் சேர்த்து தன் மீது சுமந்து சென்று, அதை தூய்மையாக்குகிறார், தன இரத்தத்தாலும், இரக்கத்தாலும், கடவுளின் அன்பாலும் அதை தூய்மையாக்குகிறார். நம்மை சுற்றி இருப்பதை நோக்குவோம்: தீமைகளால் மனிதகுலம் எந்த அளவுக்கு காயங்களை பெற்றிருக்கிறது! போர்கள், வன்முறை, நலிந்தோரை தாக்கும் பொருளாதார சீரழிவுகள், பணத்தின் மீதான பேராசை. "எந்த சவச்சீலையிலும் பைகள் இருக்காது!" என குழந்தைகளாகிய எங்களுக்கு எனது பாட்டி கூறுவார். பணத்தின் மீதான பேராசை, அதிகாரம், ஊழல், பிரிவினைகள், மனித வாழ்வுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் படைப்புக்கு எதிரானவை! மேலும், நம் ஒவ்வொருவருக்கும் நமது சொந்த பாவங்கள் தெரியும்: கடவுளுக்கும், நமது அருகில் உள்ளோருக்கும், படைப்பு அனைத்துக்குமே அன்பும் மரியாதையும் செலுத்த நாம் தவறுகிறோம். சிலுவையில் தொங்கும் இயேசு தீமை அனைத்தின் சுமையையும் உணர்ந்தவராகவும், கடவுளின் அன்பால் அதை வேன்றவராகவும் இருக்கிறார், அவர் அதை தனது உயிர்ப்பின் வழியாக வென்றார். இதுவே தன் அரியணையாகிய சிலுவை வழியாக கிறிஸ்து நம் அனைவருக்கும் கொண்டு வந்த நன்மை. அன்போடு இணைந்ததாய் இருக்கும் கிறிஸ்துவின் சிலுவை சோகத்துக்கு அன்று, மாறாக மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும். மீட்பு பெற்றதன் மற்றும் அவர் இறந்த நாளில் செய்ததில் சிறிதளவு செய்வதன் மகிழ்ச்சி.
  இன்று இந்த சதுக்கத்தில், ஏராளமான இளையோர் இருக்கிறார்கள்: 28 ஆண்டுகளாக குருத்து ஞாயிறு உலக இளையோர் தினமாக உள்ளது. இதுவே நமது மூன்றாவது வார்த்தை: "இளையோர்!" நீங்கள் திருப்பயண சிலுவையை உலகின் அனைத்து கண்டங்களின் நெடுஞ்சாலைகளிலும் சுமந்து வந்திருக்கிறீர்கள்! "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" (மத்தேயு 28:19) என்ற இயேசுவின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் நீங்கள் அதை சுமந்திருக்கிறீர்கள், இதுவே இந்த ஆண்டு இளையோர் தினத்தின் மையப்பொருளாக உள்ளது. அன்பு நண்பர்களே, அருளாளர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரின் வழியில், இன்று முதல் இந்த பயணத்தில் நானும் உங்களோடு இருக்கிறேன். கிறிஸ்துவின் சிலுவையின் மாபெரும் திருப்பயணத்தில், நாம் ஏற்கனவே அடுத்த கட்டத்தை நெருங்கிவிட்டோம். வரும் ஜூலையில் ரியோ டி ஜெனிரோவில் உங்களை சந்திக்கும் நாளை மகிழ்ச்சியோடு நோக்குகிறேன். இளையோர் உலகத்துக்கு சொல்ல வேண்டியது இதுவே: "இயேசுவை பின்பற்றுவது நல்லது, இயேசுவோடு செல்வது நல்லது, இயேசுவின் செய்தி நல்லது, நம்மை விட்டு வெளியேறுவது நல்லது, உலகின் மூலைகள் அனைத்திலும் இயேசுவை பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும்!"
   மூன்று வார்த்தைகள்: மகிழ்ச்சி, சிலுவை, இளையோர். கன்னி மரியாவின் பரிந்துரையை நாம் வேண்டுவோம். கிறிஸ்துவை சந்திப்பதன் மகிழ்ச்சியையும், சிலுவையின் அடியை நோக்க தேவையான அன்பையும், இந்த புனித வாரத்திலும், நம் வாழ்நாள் முழுவதும் இயேசுவை பின்பற்றத் தேவையான ஆர்வமுள்ள இளம் உள்ளத்தையும் கொண்டிருக்க அவர் நமக்கு கற்றுத் தருவார். ஆமென்.