Sunday, December 25, 2011

டிசம்பர் 25, 2011

குழந்தையாக பிறந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக அமைதியை கொணர்கிறார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவுத் திருப்பலியை 24ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் முன்னிரவு 10 மணிக்கு உரோம் நகர் தூய பேதுரு பேராலயத்தில் துவக்கிய திருத்தந்தை தன் மறையுரையில், வலுவற்ற குழந்தையாய் அவதரித்திருக்கும் இயேசு பாலன் தன் வல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என இறைஞ்சினார். 
   "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது" என்ற இறைவாக்கினர் எசாயா நூல் 9ம் பிரிவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, வலிமையற்ற நிலையில் அக்குழந்தை பிறந்தாலும் அதுவே வல்லமையுள்ள கடவுள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. அனைத்துத் தேவைகளுக்கும் பிறரையேச் சார்ந்திருக்கும் நிலையி லுள்ள இக்குழந்தை வழங்கும் அமைதிக்கு முடிவே இராது எனவும் தன் மறை யுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.
   குழந்தையாம் இந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக ஒரு செய்தியைக் கொணர்கிறார், அதுவே அமைதி. இவ்வுலகம் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் வன்முறைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் நாம் இறைவனை நோக்கி, "இறைவா, உம் குழந்தை நிலையையும் குழந்தைக்குரிய சக்தி யற்ற நிலையையும் கண்டு அன்பு கூர்கிறோம். ஆனால் அதேவேளை, இவ்வுலகின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள யாம், உம் வல்லமையை வெளிப்படுத்துமாறு இறைஞ்சுகிறோம். மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறியும். அமளி நிறைந்த போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளையும், இரத்தக் கறை படிந்த ஆடைகள் அனைத்தையும் நெருப்புக்கு இரையாக எரித்தருளும். அதன் வழி இவ்வுலகில் உம் அமைதி வெற்றிவாகைச் சூடுவதாக" என வேண்டுவோம்.
   இவ்வாறு தன் இரவுத் திருப்பலி மறையுரையின் போது குழந்தை இயேசுவை நோக்கிய செபத்தை முன்வத்தார் திருத்தந்தை.